இலங்கை குண்டுவெடிப்பு: பெண் செயற்பாட்டாளரை தீவிரவாதி எனக்கூறி புகைப்படம் வெளியிட்ட போலீஸ்

Amara Majeed

பட மூலாதாரம், Amara Majeed / Facebook

இலங்கை தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தேடப்படும் 6 சந்தேகநபர்களின் புகைப்படங்களை போலீசார் வியாழக்கிழமை வெளியிட்டிருந்தனர்.

இவ்வாறு வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மூன்று ஆண்களும், மூன்று பெண்களும் அடங்கும்.

இலங்கை போலீசார் இந்த புகைப்படங்களை வெளியிட்டு சிறிது நேரத்தில் மற்றுமொரு தகவலை வெளியிட்டிருந்தனர்.

தாம் அனுப்பிய ஒரு பெண்ணின் புகைப்படம் மாறுப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்துல் காதர் பாஃதீமா காதீயா என்ற பெண்ணுடையது என தெரிவித்து, அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படம், அவருடையது அல்லவென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Amara Majeed

பட மூலாதாரம், Amara Majeed / Facebook

அவ்வாறாயின், போலீஸாரினால் அனுப்பி வைக்கப்பட்ட புகைப்படத்தில் இருப்பது யார்?

இந்த புகைப்படத்திலுள்ள பெண் எனக் கூறிக் கொள்ளும் அமாரா மஜீத் என்ற பெண் தனது பேஸ்புக் கணக்கில் குறித்த விடயம் தொடர்பில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிற்றுகிழமை இலங்கையில் நடத்தப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத தாக்குதலக்கு தன்னை இலங்கை அரசாங்கம் தவறாக பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது முழுமையாக தவறான ஒரு அடையாளப்படுத்தும் நடவடிக்கை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தவறான குற்றச்சாட்டு முன்வைப்பதனை தவிர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான தகவல் பரிமாற்றங்களை செய்யும் போது, மிகவும் அவதானத்துடன் செய்யுமாறும் அவர் தனது பேஸ்புக் கணக்கில் ஊடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

Amara Majeed

யார் இந்த அமாரா மஜீத்?

அமாரா மஜீத், பெண்களை சிறப்பிக்கும் பிபிசியின் 100 Women தொடரில் 2015ஆம் ஆண்டு இடம் பெற்றிருந்தார்.

அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தில் பிறந்த மஜீதின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர் இஸ்லாமியர்கள் பொதுவாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து The Foreigners என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

மேலும், தனது 16 வயதில் The Hijab Project என்ற திட்டத்தினை இவர் தொடங்கினார். அதாவது, பெண்கள் ஒரு நாளைக்கு ஹிஜாப் அணிந்து அதன் அனுபவத்தை பற்றி சமூக ஊடகங்களில் எழுதுவதுதான் இத்திட்டம்.

இஸ்லாமியர்கள் மீது உள்ள தவறான பார்வையை மாற்றுவதே இவரது நோக்கம்.

புகைப்படம் தவறியமைக்கான காரணம்?

குற்றப் புலனாய்வு பிரிவினராலேயே இந்த புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட பின்னணியிலேயே, தாம் அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் தாம் அனுப்பிய புகைப்படத்தில் உள்ள பெண், அப்துல் காதர் பாஃதீமா காதீயா கிடையாது என தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இதற்காக இலங்கை போலீசார் மன்னிப்பு கோரியுள்ளனர்.

Zahran Hashim சகோதரி பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :