தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது?

பட மூலாதாரம், VIJAY
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கவனிக்கத்தக்க வகையில் சில வெற்றிகளைப் பதிவு செய்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.
ரசிகர் மன்றங்களிலிருந்து நகர் மன்றங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா விஜய் மக்கள் இயக்கம்? எப்படிச் சாத்தியமானது இது? என்ன செய்தது விஜய் மக்கள் இயக்கம்?
இதுவரை வெளியான முடிவுகளின்படி, புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன், திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது கவுஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
அத்துடன் சென்னையின் ஒரு வார்டில் அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது நெடுங்கால விவாதமாக இருந்து வரும் நிலையில், மெல்ல மெல்ல விஜய் மக்கள் இயக்கம் பெறும் இந்த வெற்றி கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. வெறுமனே ரசிகர்கள் மட்டும் களமிறங்கியிருந்தால் இது கவனம் பெறப்போவதில்லை. ஆனால், தேடித்தேடி பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களை இணைத்திருக்கிறார்கள் என்ற பின்புலத்திட்டம்தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக உள்ளது.
இது தொடர்பாக, புதுக்கோட்டை நகராட்சியின் 4ஆவது வார்டில் வெற்றி பெற்ற முகமது பர்வேஸைத் தொடர்பு கொண்டோம் . அவர் பேசியதாவது, " நான் விஜய் மக்கள் இயக்கத்தின் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவராக இருக்கிறேன். விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரிலேயே போட்டியிட்டிருக்க வேண்டும். சின்னமும் கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதனால்தான் சுயேச்சையாகப் போட்டியிட்டோம்.''

பட மூலாதாரம், பர்வேஸ்
''வேட்பு மனு தாக்கல் செய்தது முதலே மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இன்னும் சொல்லப்போனால், நான் வெற்றி பெறுவேன் என்று நான் நம்பினேன். அவ்வளவு வரவேற்பு இருந்தது," என்றார்.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில், இந்த வெற்றி எப்படி சாத்தியமானது என்பது குறித்துக் கேட்டபோது, "தொடர் பிரசாரங்கள் தான் காரணம். தொடக்கத்தில், ஓரிரு முறை வாக்குக் கேட்கப் போனால் போதும் என்று எண்ணியிருந்தேன். ஆனால், சுமார் 30 முறை வாக்குக் கேட்கச் சென்றேன். மீண்டும் மீண்டும். நாள்தோறும் சென்றேன், மற்ற கட்சிகள் ஒருமுறை சென்ற பகுதிக்கு மறுமுறை செல்வது அரிதாகவே இருந்தது" என்று பதிலளித்தார்.
"அதுபோக என் மாவட்டத்துக்கு உட்பட்டு பலரையும் தேர்வு செய்து அனுப்பியிருந்தேன். இன்னும் முடிவுகள் வெளிவர வேண்டி இருக்கின்றன. நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்" என்றும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிக்குள்:
சென்னை மாநகராட்சியின் 136ஆவது வார்டில் 22 வயது மாணவியான நிலவரசி துரைராஜ் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். தமிழகத்தில் வெற்றி பெற்ற இளம்பெண்கள் மூவருமே 22 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், 22 வயதில் வென்ற வார்டு உறுப்பினரான இவர் கவனிக்கப்பட்ட வேட்பாளராக உள்ளார். ஆனால், இதே வார்டில் இரண்டாம் இடம் பெற்ற அறிவுச்செல்வி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் ஆவார்.

நிலவரசி துரைராஜுக்கு கடும் போட்டியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் அதிமுக வேட்பாளரான லக்ஷ்மி கோவிந்தசாமி. ஆனால், தேர்தல் முடிவுகளின்போது லக்ஷ்மி துரைராஜ் வெறும் 1137 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.
7122 வாக்குகள் பெற்ற நிலவரசிக்கு அடுத்த இடத்தில் இருந்தது விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் அறிவுச்செல்வி. அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5112.
அறிவுச்செல்வியின் பின்னணி வேறு:
அறிவுச்செல்வியின் கணவர் குணசேகரன் 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக சார்பில் வென்று ஏற்கனவே இந்த வார்டில் கவுன்சிலராக பொறுப்பில் இருந்திருக்கிறார். பின்நாட்களில் அதிமுகவில் இருந்து விலகிய இவர், சுயேச்சையாகப் போட்டியிட முடிவெடுத்திருந்த நிலையில், 136ஆவது வார்டு பெண்களுக்கான வார்டாக அறிவிக்கப்பட்டதால் அறிவுச்செல்வி நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இது தொடர்பாக பிபிசி தமிழுடன் பேசிய அறிவுச்செல்வி, " என் கணவர் முன்பே இந்த வார்டின் உறுப்பினராக இருந்தவர். அவருக்கு இந்த வார்டின் பிரச்னைகள் நன்றாக தெரியும். ஆனால், இந்த முறை என் கணவர் போட்டியிட முடியாததால் நான் போட்டியிட்டேன்," என்று கூறினார்.
எனில் வேறு கட்சிகள் மூலம் சீட் பெறாமல், நேரடி சுயேச்சையாகவும் அல்லாமல் விஜய் மக்கள் இயக்க ஆதரவுடன் சுயேச்சையாக நின்றது ஏன் என்று கேட்டோம்.
''நாங்கள் போகவில்லை''

பட மூலாதாரம், அறிவுச்செல்வி
அதற்கு பதிலளித்த அறிவுச்செல்வி, "நாங்கள் சுயேச்சையாகத்தான் நின்றோம். பிறகு விஜய் மக்கள் இயக்கத்தினர் எங்களைத் தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி இணைந்து கொண்டனர். அவர்களாகத்தான் தேடிப்பார்த்துவிட்டு வந்து ஆதரவு தெரிவித்தார்கள். நாங்களும் ஒப்புக் கொண்டோம்," என்றார்.
மேலும், "என் கணவரின் அரசியல் செல்வாக்கும், விஜய் ரசிகர்களின் வாக்குகளும் சேர்ந்ததால்தான் இந்த வாக்கு எண்ணிக்கை சாத்தியமானது. விஜய் மக்கள் இயக்கத்துடன் சேர்ந்த பிறகு எங்களுக்கு வரவேற்பு அதிகரித்ததை உணர முடிந்தது" என்றும் தெரிவித்தார்.
ரசிகர்கள் வேட்பாளர்களாக களமிறக்குவது ஒருபுறம் என்றால் சுயேச்சை வேட்பாளர்களில் குறிப்பிட்டவர்களைத் தேர்வு செய்து ஆதரவு வழங்கும் வேலையையும் செய்திருக்கிறது விஜய் மக்கள் இயக்கம்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












