கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் பி.ஆர். பழனிச்சாமியை விடுவித்த உத்தரவு ரத்து

பட மூலாதாரம், Getty Images
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் பி.ஆர். பழனிசாமியை விடுதலை செய்து மேலூர் நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்துசெய்வதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை ஒட்டியுள்ள ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு பகுதிகளில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுத்தது தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி, அவருடைய மகன் சுரேஷ்குமார், அவருடைய பங்குதாரர் ராம. சகாதேவன் உள்ளிட்டவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக வெட்டியெடுக்கப்பட்ட கிரானைட் கற்களை அரசுடமையாக்க அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் அன்சுல் மிஸ்ரா சார்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றன.
இந்த வழக்கை விசாரித்த மேலூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் கே.வி.மகேந்திரபூபதி இந்த வழக்கில் இருந்து பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோரை விடுதலைசெய்ததுடன் இந்த வழக்கை தாக்கல் செய்த ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு சிறப்பு வழக்கறிஞர்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மீது அரசின் அனுமதி பெற்று குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
மேலூர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசுத் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் அரசுத் தரப்பிலும் மாவட்ட நிர்வாகத்தின் தரப்பிலும் வழக்குத் தொடரப்பட்டது.
அந்த வழக்கு நீதிபதி பி. புகழேந்தி முன்பாக நடைபெற்றுவந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, மேலூர் நீதிமன்ற நீதித் துறை நடுவரின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். அன்சுல் மிஸ்ரா, அரசு வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற உத்தரவை ரத்து செய்வதாகவும் நீதிபதி கூறினார்.
மேலும் கனிமவள முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் இரண்டு மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்றும் இந்த வழக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக, இந்த வழக்கில் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி அளித்த தீர்ப்பு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது. அவர் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டிருந்த கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு எடுக்காமல், சாதாரண குற்றச்சாட்டுகளை விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது.
இதற்குப் பிறகு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தலைமையிலான குழு ஒன்றும் விசாரணை நடத்தியது. பிறகு அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












