தி.மு.கவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக

பட மூலாதாரம், FACEBOOK

தி.மு.கவின் சார்பில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு வழக்கறிஞர் பி. வில்சன், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையின் பொதுச் செயலாளர் மு. சண்முகம் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. ஒரு இடம் வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி தி.மு.கவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவையில் 18 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் தி.மு.கவைச் சேர்ந்த கனிமொழி, அதி.மு.கவைச் சேர்ந்த அர்ஜுனன், ஆர். லட்சுமணன், வி. மைத்ரேயன், டி. ரத்தினவேல், சி.பி.ஐயைச் சேர்ந்த டி. ராஜா ஆகிய ஆறு உறுப்பினர்களின் பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவுக்குவருகிறது.

புதிய உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு ஜூலை 1ஆம் தேதியான இன்று துவங்கியது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில், ஆளும் அ.தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் தி.மு.கவுக்கு மூன்று மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும் கிடைக்கும்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தைகளின்போது, தி.மு.க. ஒரு மாநிலங்களவை இடத்தை வைகோ தலைமையிலான ம.தி.மு.கவுக்கு அளிப்பதாக வாக்களித்திருந்தது. அதேபோல, அ.தி.மு.க. ஒரு இடத்தை பாட்டாளி மக்கள் கட்சிக்கு அளிப்பதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில், தி.மு.க. இன்று தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தி.மு.கவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பி. வில்சன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்துவருகிறார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி மறைந்தபோது, மெரினா கடற்கரையில் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பான வழக்கில் தி.மு.க. சார்பில் வாதாடியவர் இவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: