டிரம்ப்-பன்னன் பிரச்சனை: புத்தக வெளியீட்டை நிறுத்துமாறு கோரும் டிரம்ப் தரப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்கும் வகையில் செய்திகளை கொண்டிருக்கும் ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கு டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தடைகோருவதாக அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Reuters
எழுத்தாளர் மைக்கேல் வோல்ஃப் மற்றும் புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடித்த்தில் "புத்தகங்களை வெளியிடக்கூடாது, அவற்றை மேலும் அச்சிடுவது, விநியோகிப்பது ஆகியவை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
`Fire and Fury: Inside the Trump White House` என்ற புத்தகம் செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்படவுள்ளது.

பட மூலாதாரம், Amazon
இந்த புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் தலைமை ஆலோசகர் ஸ்டீவ் பன்னனின் அதிரடி கருத்துகள் பல இடம் பெற்றுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்டீவ் பன்னன், புத்தியிழந்துவிட்டதாக டிரம்ப் கருத்து தெரிவித்திருக்கிறார்.
பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருக்கும் ஸ்டீவ் பன்னன், அதிபர் பணிக்கு டிரம்ப் போதிய அளவு தயாராகவில்லை என்றும், டொனால்ட் டிரம்ப்பின் மகன் ரஷ்யர்களை சந்தித்தது தேசத்துரோகம் என்று கூறியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
டிரம்ப் பிரசார அதிகாரிகளும் ரஷ்யாவிற்கும் இடையே உறவுகள் இருந்ததா என்பது பற்றி விசேட ஆலோசகர் ராபர்ட் முல்லர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
டிரம்புக்கு அவப்பெயரை உண்டாக்குவதாக வெள்ளை மாளிகை குற்றம்சாட்டியிருப்பதை அடுத்து, டிரம்புக்கும் ஸ்டீவுக்கும் இடையிலான சர்ச்சை தீவிரமடைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வழக்கறிஞர்களின் கருத்து என்ன?
அவதூறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஸ்டீவ் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என டிரம்பின் வழக்கறிஞர்கள், கூறுவதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
"இந்த புத்தகத்தில் டிரம்ப்பைப் பற்றிய அவதூறான கருத்துகளை கூறியிருக்கும் ஸ்டீவ் பன்னன், அதற்கான எவ்வித அடிப்படை ஆதாரத்தையும் மேற்கோள் காட்டவில்லை" என்று ஏபிசி நியூஸ் கூறுகிறது.
புத்தகத்தை எழுதியுள்ள வோல்ஃப் அல்லது புத்தக வெளியீட்டாளர், ஹென்றி ஹோல்ட் ( Henry Holt and Co Inc) இந்த விவகாரம் பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
புத்தகத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது?

பட மூலாதாரம், AFP / Getty
பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள வோல்ஃப்பின் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய தகவல்கள்:
•தேர்தலில் டிரம்ப் பெற்ற வெற்றி அவரது குழுவினருக்கே அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது
•தேர்தலன்று இரவில் டிரம்பின் மனைவி மெலனியா கண்ணீர் சொறிந்தார்.
•அதிபர் பதவியேற்பு விழாவில் பிரபலங்கள் கலந்து கொள்ளாத்து டிரம்ப்புக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது.
•"வெள்ளை மாளிகை சோகமாகவும், சற்று அச்சத்துடன் இருப்பதாக" புதிய அதிபர் கருதுகிறார்.
•டிரம்பின் மகள் இவாங்காவும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னரும் இவாங்கா அமெரிக்காவின் "முதல் பெண் அதிபர்" என்ற திட்டத்துடன் உள்ளார்கள்.
•தனது தந்தையின் சிகை அலங்காரத்தை கேலி செய்யும் இவாங்கா டிரம்ப், அதற்கு தந்தையின் நண்பர்களே காரணம் என்று அடிக்கடி கூறுவார்.
இந்த புத்தகத்தில் 200க்கும் அதிகமான பேட்டிகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












